articles

img

கல்வி, சுகாதாரத் துறையை பற்றி கவலைப்படுகிறீர்களா?- ஜோதி மல்ஹோத்ரா

பட்ஜெட்டில் இந்த இரண்டு முக்கியத் துறை களையும் மோடி அரசு புறக்கணித்து இருக்கிறது. பிரதமர் மோடி கார்கில் நினைவகத்தில் நின்று எல்லை தாண்டிய பயங்கர வாதத்திற்கு பாகிஸ்தான் தொடர்ந்து ஆதரவளித்து வருவதை கண்டித்தார். கடந்த 25 வருடங்களாக இதில் பெரிய அளவிற்கு மாற்றமில்லை என்பது வேறு கதை.

ரோல்பேக் நிதி அமைச்சரா?

ஆனால், அவருடைய அரசு அளித்த பட்ஜெட் ஆவணங்கள் ஆய்வு செய்யப்படாமல் காலம் கடந்து வருகிறது. கல்வி மற்றும் சுகாதாரம் குறித்த விவரிப்புகள் கண்ணிமைக்கும் நேரத்தில் வந்து போகிறது. பங்குச் சந்தையின் மூலதன ஆதாயங்க ளுக்கு வரிவிதிப்பு பற்றி பேசியவுடன் பங்குச்சந்தை யின் மீதுதான் எல்லோருடைய கவனமும் கடந்த ஒரு வாரமாக குவிந்தது. நிர்மலா சீதாராமன் முரட்டுக் காளையின் வாலை  முறுக்கிய போது பங்குச் சந்தை கோபமடைந்தது.ஆனாலும் இதில் அவர் தொடர்ந்து உறுதியோடு நிற்பாரா அல்லது ரோல்பேக் (ROLLBACK) நிதி அமைச்சராக மாறிவிடுவாரா என பொறுத்திருந்து பார்க்கலாம்.

ஸ்மிருதி இரானி அளவுக்கு மோசமில்லை தான்!

கல்வி மற்றும் சுகாதாரத் துறைகளை விரிவு படுத்துவதை, கூடுதல் நிதி ஒதுக்குவதை, நவீன மயமாக்கலை, திருமதி நிர்மலா சீதாராமன் ஏன் பட்ஜெட்டில் புறக்கணித்தார்? ஆணாதிக்கம் நிறைந்த அரசியல் கட்சியில் வளர்ந்து இந்த உயர்ந்த இடத்திற்கு வருவதற்கு முன் அவர் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவர். பொய்  புனை சுருட்டுகளிலிருந்து உண்மையை எப்படி மீட்பது, நல்லதையும் அல்லதையும் எப்படி தரம்  பிரிப்பது என கற்றவர். உதாரணமாக 2014இல் மனிதவள அமைச்சராக இருந்த பொழுது அவரது முன்னாள் சக ஊழியர் ஸ்மிருதி இரானி தனது அதி காரிகள் மீது கோப்புகளை வீசியெறிந்தார்.அந்த அளவிற்கு இவர் மோசம் இல்லை. என்னதான் முயன்றாலும் அனைவரின் பார்வையில் இருந்தும் அவரால் சில  தரவுகளை மறைக்க முடியவில்லை.

ஆப்பிளை ஆரஞ்சுடன் ஒப்பிடுவது!

எடுத்துக்காட்டாக பட்ஜெட் மதிப்பீடுகளை (Budget Estimate), திருத்திய மதிப்பீடுகளுடன்    (Revised Estimate)ஒப்பிடுவது முற்றிலும் தவறு என்பது அவருக்கு தெரியும். இவை இரண்டும் (Chalk and Cheese) சுண்ணாம்பு மற்றும் வெண்ணெய் போன்றது. திருத்திய மதிப்பீடுகள் உண்மையான செலவினத்தை குறிப்பது. எனவே இந்த ஆண்டு பட்ஜெட் மதிப்பீடுகளை கடந்த ஆண்டின் திருத்திய ஒப்பீடுகளுடன் ஒப்பிட்டு இந்த ஆண்டு கூடுதலாக 2  சதவிகிதம் ஒதுக்கியுள்ளோம் என கூறுவதும் உண்மையை  மறைப்பதாகும்.ஏனெனில் இது ஆப்பிளை ஆரஞ்சுகளுடன் ஒப்பிடுவதாகும்.

மக்களை ஏமாற்றிய  ஆயுஷ்மான் பாரத்!

இரண்டு வருடங்களின்  சுகாதாரம் தொடர்பான பட்ஜெட் மதிப்பீட்டை ஒப்பிட வேண்டும். அதாவது ரூ. 89,155 கோடியிலிருந்து ரூ. 90,958.63 கோடி ஆக அதிகரிப்பு. சுகாதார பட்ஜெட்டில் 1803.63 கோடி. அதாவது 1.98 சதவீதம் அதிகரிப்பு.

பிரதமர் மோடி விளம்பரம் செய்த (ஆயுஷ்மான் பாரத்- 2018 -அவர் அறிவித்த) முதன்மையான  திட்டத்தின் முக்கியக் கூறுகள் ஆன தேசிய சுகாதாரத் திட்டத்திற்கு 1.16 சதவீதம் மற்றும் (PM -JAY) பிஎம்- ஜேஏஒய் திட்டத்திற்கு 1.4 சதவீதம் மட்டுமே அதிகரிக்கப்பட்டுள்ளது.

வாயால் சுட்ட வடைகள்

2025 இல் காசநோய் ஒழிப்பு, அனைத்து குழந்தை களுக்கான தடுப்பூசி, கர்ப்பவாய் புற்று நோய்க்கு எதிராக கர்ப்பிணிப் பெண்களுக்கு (HPV) எச்பிவி தடுப்பூசி திட்டம் ஆகியவை பிரதமர் மோடி கடந்த பிப்ரவரி மாதத்தில் வெளியிட்ட வாணவேடிக்கைகள்.இவற்றை  நிறைவேற்ற  இந்த மிகச் சொற்பமான அதிகரிப்பு போதுமா?

பாடம் கற்க மறுக்கும் மோடி அரசு

2017 ஆம் ஆண்டின் தேசிய சுகாதாரக் கொள்கை க்கு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2.5% நிதி ஒதுக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் இந்த பட்ஜெட்டில் கூட ஒதுக்கியதோ 1.9சதவீதம். இந்தியாவை கடுமையாகப் பாதித்த கோவிட் 19 பின்ன ணியிலும் (அதிகாரப்பூர்வமான இறப்பு சுமார் 5,32,00,000 பேர் ) மோடி அரசு ஏன் பாடம் கற்க மறுக்கிறது?

கல்வித்துறையை  பட்டினி போட்டு...

கல்வித்துறை அதைவிட மோசமான பின் தங்கிய நிலையில் உள்ளது. கடந்த ஆண்டில் பட்ஜெட் மதிப்பீடு 1,12,899 கோடி ரூபாய். இந்த ஆண்டு 1,20,627.87 கோடி ரூபாய்.7,728.4 கோடி உயர்வு. சுமார் 2.8 சதவீதத்தில் இருந்து 2.7 சதவீதமாக ஒதுக்கீடு குறைந்துள்ளதை  பொருளாதார ஆய்வு அறிக்கை (Economic Survey) குறிப்பிடுகிறது. (இது 2010ஆம் ஆண்டின் அளவிற்கு குறைக்கப்பட்டுள்ளது)

கல்விக்கான ஒதுக்கீடு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4 இலிருந்து 6  சதவிகிதமாக இருக்க வேண்டும் என்ற யுனெஸ்கோவின் அளவுகோல் நினைவு கூறத்தக்கது.

மக்கள் சீனம் தனது மொத்த உள்நாட்டு உற்பத்தி யில் 3.3 சதவீதத்தை கல்விக்காக ஒதுக்குவதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை.உலகின் தலைசிறந்த வெளிநாட்டு பல்கலைக்கழகங்களையும் கல்வி நிறு வனங்களையும் தங்கள் நாட்டிற்கு அது வரவேற்கி றது. தலிபான் ஆட்சி செய்யும் ஆப்கானிஸ்தானிலும் கூட இந்த அளவுகோல் 2.8% ஆக  இருப்பது மோடி யின் அரசாங்கத்திற்கு நெருடலை ஏற்படுத்த வில்லையா?

இது தான் மோடியின்  புதிய இந்தியா!

இந்தியாவின் அரசியல் வர்க்கம், அதன் குழந்தைகள் படிக்கிறதா, ஆரோக்கியமாக இருக்கி றதா என்பது குறித்து கவலைப்படுவதில்லை. தனியார் ஆதிக்கத்தின் கீழ் கல்வித்துறை முழுமையாக சென்ற  பிறகு இந்த கேள்விக்கெல்லாம் அவசியம் ஏது? பெரும்பான்மை குடிமக்கள் தங்களுடைய சொத்துக்களை விற்றுத்தான் இவை இரண்டிற்கும் இந்தியாவில் செலவு செய்கிறார்கள்.  பணம் இருந்தால் கல்வி, சுகாதார மருத்துவ வசதிகள். இல்லையேல் சேற்றிலும் சகதியிலும் மக்கள் வாழ வேண்டும். இதுதான் பிரதமர் மோடி அவர்களின்” புதிய இந்தியா”.

சோவியத் யூனியன், மக்கள் சீனம்!

இந்த இரண்டு துறைகளையும் முறையாக பெற்றிருந்த இரண்டு நாடுகள் சோவியத் யூனியன் மற்றும் அதன் வாரிசு ரஷ்யா, அத்துடன் சீனா. இரண்டையும் கம்யூனிஸ்ட் அரசுகள் என்று எளிதா கக் கூறி கடந்து விடலாம். ஜனநாயகம் மட்டும் தான் விவாதங்களை அனுமதிக்கிறது.கம்யூனிஸ்டுகள் சர்வாதிகாரிகள் என்று விமர்சிக்கலாம். கல்வி கிடைக்காமல் இருந்தாலும் பரவாயில்லை. கம்யூனிஸ்ட்  ஆட்சி கூடாது என வாதிடுபவர்களும் கூட இங்கே இருக்கிறார்கள்.

கேரளாவின்   இஎம்எஸ் அரசின் பாதையில்...

உண்மை என்னவென்றால் ஒரு தரமான நாடு அனைத்து குழந்தைகளுக்கும் சிறந்த கல்வியை அளிக்க வேண்டும். உயர்நிலை அடுக்கில் உள்ளவர்களுக்கு மட்டும் அளித்தால் போதாது என்பதை ரஷ்யாவும் சீனாவும் புரிந்து கொள்கின்றன. நாடு முழுவதும் உள்ள ஆரம்பப்பள்ளிகள் மற்றும் சுகாதார மையங்களுக்கு அதிக நிதியை ஒதுக்கு வதில் இருந்து இந்த பணியை தொடங்க வேண்டும். சுவாதித்திருநாள் போன்ற மன்னர்களிடமிருந்தும் இஎம்எஸ் நம்பூதிரிபாட் அவர்கள் தலைமையிலான கம்யூனிஸ்ட் அரசாங்கத்திடமிருந்தும்  தென் மாநி லங்கள் இதை வேகமாக கற்றுக் கொண்டன. இன்று  வரை கூடுதலான நிதியை ஒதுக்கி சமூகத்துறையை உயிர்ப்போடு வைத்திருப்பதில் அவை சிறந்த முன்மாதிரியாக திகழ்கின்றன.

மோடியின் அரசு கல்வி, சுகாதாரத் துறைகளை  புறக்கணிப்பதற்கான காரணம் இப்பொழுது புரிகிறது அல்லவா? ஏனெனில் அவர்கள் பங்குச் சந்தையில் கவனம் செலுத்துபவர்கள். உள்நாட்டிலும் வெளி நாட்டிலும் உள்ள செல்வந்தர்களுக்கு அவர்களு டைய சொத்துக்களை மேலும் கொழுக்க  ஏற்றவாறு  சமிக்ஞைகளை உருவாக்குவதில் மட்டும் கவனம் செலுத்துபவர்கள்.

எதிர்க்கட்சிகள் பாஜகவின் இந்த நாசகரக் கொள்கைகளுக்கு எதிராகப் போராட முன்வர வேண்டும்.

தி டிரிபியூன் நாளிதழ் 27/7/24.
தமிழில் : கடலூர் சுகுமாரன்